ரூ.2 ஆயிரம் பெட் கட்டி 41 முட்டை குடித்தவர் சாவு..

உத்தரபிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடுவதாக பெட் கட்டி, 41 முட்டைகளை குடித்தவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

உத்தரபிரதேச மாநிலம், ஜான்பூரைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ்(42). இவரும், இவரது நண்பர் ஒருவரும் பேசிக் கொண்டிருந்த போது, நண்பர் ஒரு சவால் விட்டார். ஒரே சமயத்தில் 50 முட்டைகள் சாப்பிட முடியுமா என்பதுதான் சவால். இதென்ன பிரமாதம், நான் சாப்பிடுகிறேன், எவ்வளவு பெட்? என்று சுபாஷ் கேட்டிருக்கிறார். உடனே அந்த நண்பர், தொடர்ச்சியாக 50 முட்டை சாப்பிட்டால் ரூ.2 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்டார்.

இதன்பின், இருவரும் பீபிகஞ்ச் மார்க்கெட்டில் ஒரு கடைக்குச் சென்று முட்டைகளை வாங்கினர். சுபாஷ் வரிசையாக ஒவ்வொரு முட்டையாக உடைத்து வாயில் ஊற்றி சாப்பிட்டார். 41 முட்டைகளை மடக், மடக் என்று குடித்தவர், திடீரென அப்படியே சரிந்து விழுந்தார். மயங்கி விட்ட அவரை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளி்தது விட்டு, சஞ்சய் காந்தி மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More News >>