ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணைகள்.. முதல்வர் திறந்து வைத்தார்

ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு தடுப்பணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று(நவ.5) தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூர் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் பள்ளம் அணைக்கட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் கிராமம், அரசம்பட்டி அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் 6 கூட்டு குடிநீர்த் திட்ட கிணறுகள் மூலம் 224 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு கட்டப்பட்டுள்ள தடுப்பணை, போச்சம்பள்ளி தாலுகா, பெண்டறஹள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாகநதியின் குறுக்கே மேல் நகர் ஊராட்சி பகுதியில் உள்ள 97 ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் அரசு மாளிகை கூடுதல் அலுவலக கட்டிடம் என்று மொத்தம் 25 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீர்வள ஆதாரத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மற்றும் கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More News >>