சிவசேனா சஞ்சய் ராவத் ஆஸ்பத்திரியில் அனுமதி..

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். அவர்தான், மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா சார்பில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆட்சியமைப்பது குறித்து பேசிவந்தார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இதயசிகிச்சை நிபுணர் டாக்டர் அஜித்மேனன் கூறுகையில், ராவத்துக்கு ரத்தக்குழாயில் 2 அடைப்பு இருந்தது. இதனால், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 3 ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ராவத்தை சிவசேனா தலைவர்கள் சந்தித்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் இன்று(நவ.12) காலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

More News >>