கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

கர்நாடகாவில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து முந்தைய சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், அவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று அனுமதியும் வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்ற போதும் அதற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து, 2வது இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. மேலும், ம.ஜ.த. தலைவர் குமாரசாமிக்கு முதல்வர் பதவி அளித்தது. ஆனால், குமாரசாமிக்கு எதிரியாக செயல்படும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு அது பிடிக்கவில்லை. அதனால், மறைமுகமாக அந்த கூட்டணி அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உருவெடுத்தனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், அப்போதைய சபாநாயகர் அந்த ராஜினாமாவை ஏற்காமல், அவர்களை தகுதிநீக்கம் செய்தார்.

எனினும், மெஜாரிட்டியை இழந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்போது பாஜக பக்கம் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். தற்போது அந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில், தங்களின் தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டால், பாஜக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று அந்த எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டிருந்தனர். அவர்களுக்கு பாஜகவில் சீட் கொடுக்க பாஜக முதல்வர் எடியூரப்பாவும் உறுதி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோர் அளித்த தீர்ப்பில், இந்த 17 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும். சபாநாயகரின் அதிகாரங்களில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை. அதே சமயம், கர்நாடகாவில் நடந்த சம்பவங்கள், தற்போது நிலவும் சூழல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறோம். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவி ஏற்பதற்கும் எந்த தடையுமில்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.

இதன்மூலம், காங்கிரஸ் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியானதாக அறிவிக்கப்பட்டாலும், இடைத்தேர்தல்களில் தகுதிநீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை போட்டியிட அனுமதித்திருப்பது எடியூரப்பாவுக்கு வெற்றியாக தெரிகிறது.தற்போது முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் உள்ளது. அதே சமயம், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு மொத்தமாக 101 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே, இந்த 15 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற்றாக வேண்டும். பாஜக அதற்கு மேலும் வெற்றி பெற்றால் வலுவான ஆட்சியாக அமைந்து விடும்.

More News >>