கமல், ரஜினி இனி தாத்தா வேடத்தில் நடிக்கலாம் முதல்வர் வேடம் வேண்டாம் - இயக்குநர் கவுதமன்

கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இனி அப்பா, தாத்தா வேடங்களில் நடிக்கலாம் முதலமைச்சராக வேடம் போட வேண்டாம் என்று இயக்குநர் வ.கவுதமன் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் நீட் தேர்வுக்கு விளக்கு வேண்டும் என்பதை தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள எம்.பி.க்களை நேரில் சந்தித்து மனு கொடுத்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக திருச்சி எம்.பி. குமாரை சந்தித்த பிறகு நெடுவாசல் வந்தார். அங்கு அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடிய பிறகு தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவுதமன், “நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு சட்டமாக இயற்றி கொடுத்த போதும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் தமிழக எம்.பிகளை பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி மனு கொடுத்து வருகிறோம். மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் பாராளுமன்றத்தை முற்றுகையிடவும் செய்யலாம்.

நீட் தேர்வுக்கு 10 நாட்கள் முன்பு வரை விளக்கு அளிக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டுக்காக, நெடுவாசலகுக்காக தமிழகத்தில் மாணவர்கள் கொந்தளித்து எழுந்ததைப் போல நீட்டுக்காகவும் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றார்.

மேலும், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, “அவர்கள் திரையில் நடித்தால் போதும் இனி தரையில் நடிக்க வேண்டாம். தமிழகத்தில் மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள் போராட்டம் நடந்த போது எல்லாம் மோடிக்கு பின்னால் இருந்து கொண்டார்கள்.

இப்போது முதல்வர் கனவில் அரசியலுக்கு வருகிறார்கள். கதாநாயகனாக நடித்தவர்கள் இனி அப்பா, தாத்தா வேடங்களில் நடிக்கலாம் முதலமைச்சராக வேடம் போட வேண்டாம். எங்கள் மக்கள் ஒரு போதும் ஏமாறமாட்டார்கள்” என்று காட்டமாக தெரிவித்தார்.

More News >>