மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனா முதல்வர்தான்.. சஞ்சய் ராவத் பேட்டி

மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் சிவசேனா முதல்வர்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜக மோதலால், தேர்தல் முடிந்து 25 நாட்களாகியும் ஆட்சியமைக்கப்படவில்லை. பாஜகவுடன் மோதல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா பேசத் தொடங்கியது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத், பாஜக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆட்சியமைப்பது குறித்து பேசி வந்தார்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. ராவத்துக்கு ரத்தக்குழாயில் 2 அடைப்பு இருந்தது. இதனால், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 3 ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை முடிந்து இன்று காலையில் சஞ்சய் ராவத் வீடு திரும்பினார். முன்னதாக, லீலாவதி மருத்துவமனையில் இருந்து அவர் புறப்படும் போது செய்தியாளர்களிடம், மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் சிவசேனா முதல்வர்தான் என்று கூறிவிட்டு சென்றார்.

More News >>