ராகுல் மீதான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு..

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசியதற்காக ராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ரபேல் முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி விட்டதாகவும் அவர் ஒரு கூட்டத்தில் பேசினார். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த மீனாட்சி லேகி எம்.பி, சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தான் தவறுதலாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டிவிட்டதாக வருத்தம் தெரிவித்து ராகுல்காந்தி அபிடவிட் தாக்கல் செய்தார். அதில் திருப்தியடையாத சுப்ரீம் கோர்ட், விரிவான பதிலளிக்குமாறு கூறி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தாக்கல் செய்த பதில் மனுவில், தவறுக்கு மன்னிப்பு கோரி புதிய அபிடவிட் தாக்கல் செய்வதாக கூறியிருந்தார். இதன்பிறகு, மன்னிப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு நாளை (நவ.14) தீர்ப்பு அளிக்கவுள்ளது.

More News >>