அடுத்த மாதம் முதல் ஏர்டெல், வோடபோன் கட்டணங்கள் உயரும்..

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருவதால், அடுத்த மாதம் முதல் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளன.

அம்பானியின் ஜியோ மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி கடன் வைத்துள்ளது. இதில் மத்திய அரசுக்கு ரூ.21,632 கோடியை உடனே செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே போல், வோடபோன்-ஐடியா நிறுவனம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வைத்துள்ளது. இதுவும் அரசுக்கு உடனடியாக ரூ.28 ஆயிரம் கோடி செலுத்த வேண்டியுள்ளது. மேலும், இந்த நிறுவனம் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.51 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில், ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டணங்களை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு சேவைகளில் குறைந்தது 5 முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது நாட்டில் லாபத்துடன் இயங்கும் ஒரே மொபைல் சேவை நிறுவனமான ஜியோ, 35 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம், கட்டணத்தை உயர்த்துவது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

More News >>