உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்பு.. கவர்னருடன் சந்திப்பு..

மகாராஷ்டிராவில் முதலமைச்சராக உத்தவ்தாக்கரே, நாளை மாலை பொறுப்பேற்கிறார். இன்று அவர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவியை சிவசேனா கேட்டதால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்தது. இதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே முதல்வராவார் என்று கடந்த 23ம் தேதி மாலையில் சரத்பவார் அறிவித்தார்.

ஆனால், அது வரை அவருடன் இருந்த சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், நள்ளிரவில் பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் மறுநாள் காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அதிகாலையில் பாஜக ஆட்சி அமைந்தது எல்லோருக்குமே ஆச்சரியத்தை அளித்தது. சிவசேனா, என்.சி.பி. கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். காரணம், பலருக்கும் அஜித்பவாரின் முடிவு காலையில்தான் தெரிந்திருக்கிறது.

இதன்பின், சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டாக தொடர்ந்த வழக்கில், பட்நாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் ஒரேயொரு நாள் அவகாசம் கொடுத்தது. ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்பதை பட்நாவிசும், அஜித்பவாரும் உணர்ந்தனர். முதலில் அஜித்பவார்,. துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பட்நாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியேற்க வருமாற கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். நாளை மாலை 6.40 மணிக்கு மும்பை சிவாஜி பார்க்கில் நடைபெறும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவியேற்கவிருக்கிறார்.

இதற்கிடையே, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தாக்கரே ஆகியோர் இன்று காலை சந்தித்தனர். மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பால் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது மனோகர் ஜோஷி, நாராயண் ராணே ஆகியோர் முதலமைச்சர் பதவியை வகித்துள்ளனர். அதே சமயம், தாக்கரே குடும்பத்தில் இதுவரை யாரும் எம்.எல்.ஏ.வாக கூட இருந்ததில்லை.இப்போது, உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அவரது மகன் ஆதித்ய தாக்கரே, ஒர்லி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

More News >>