வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம்.. முதலமைச்சர் உத்தரவு

மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து விழுந்து இறந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏ.டி.காலனியில் இன்று அதிகாலையில் 4 வீடுகள் இடிந்து விழுந்தன. சுற்றுச்சுவர் திடீரென இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 4 வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இன்று (டிச.2) அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் மூன்று வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததில், குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்ஷயா, சிறுவன் லோகுராம் ஆகிய பதினைந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பலத்த மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மேற்படி 15 நபர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>