சந்திரயானின் லேண்டர் நிலவில் மோதிய பகுதி.. நாசா படம் வெளியீடு..

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், நிலவில் மோதிய பகுதிைய நாசாவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது.

நிலவின் தெற்கு பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), கடந்த ஆகஸ்டில் விண்ணுக்கு அனுப்பியது. புவிவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, செப்டம்பர் 2ம் தேதியன்று நிலவின் வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டது.

அதன்பின், நிலவில் இறங்கி ஆய்வு மேற் கொள்வதற்கான விக்ரம் லேண்டர், சந்திரயானில் இருந்து பிரித்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவில் இறங்குவதற்கு வசதியான சுற்றுவட்டப் பாதைக்கு லேண்டர் விக்ரம் சென்றது. கடைசியாக, செப்.7ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக விக்ரம் லேண்டரை நிலவில் இறக்குவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், நிலவில் இருந்து 2.1 கி.மீ. தூரத்தில் லேண்டர் சுற்றிக் கொண்டிருந்த வரை இஸ்ரோ கட்டுப்பாட்டறையுடன் தொடர்பில் இருந்தது. அதன்பின், லேண்டர் நிலவில் இறங்கும் போது அதன் தொடர்பு துண்டித்து போய் விட்டது. இதனால், லேண்டரிடம் இருந்து எந்தவித தகவலையும் பெற முடியாமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் தவித்தனர்.இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவின் உதவி கோரப்பட்டது.

நாசா ஏற்கனவே எல்ஆர்ஓ என்ற செயற்கைக்கோளை நிலவை சுற்றி வரச் செய்திருக்கிறது. அதன் கேமராக்கள், நமது விக்ரம் லேண்டர் இறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இடத்திற்கு நேராக செல்லும் போது படங்களை எடுத்து அனுப்பின. ஆனாலும், அதில் லேண்டரின் பாகங்கள் எதுவும் தெரியவில்லை என்று நாசா கூறியிருந்தது. அக்டோபரில் மீண்டும் அந்த பகுதியை எல்.ஆர்.ஓ கடக்கும் போது, நல்ல வெளிச்சத்தில் படங்களை எடுத்து அனுப்பினால், அப்போது விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்றும் நாசா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் மோதிய பகுதியை காட்டும் படத்தை வெளியிட்டது. மேலும், அதில் லேண்டரின் பாகங்கள் உடைந்து சிதறி கிடப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விண்வெளி ஆய்வு துறையின் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கும் போது மெதுவாக இறக்கப்பட வேண்டும். ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது மிக வேகமாக இறங்கியதால் நிலவின் மேற்பரப்பில் கடுமையாக மோதியிருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

More News >>