தந்தை, மகள் பாசப் போராட்டம் - திருமணத்தை எதிர்த்து வழக்கு

ஹாதியா - ஷபின் ஜஹான் தொடர்பான வழக்கை விசாரித்து வரும்,உச்சநீதிமன்றம் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த அகிலா, கடந்த 2016-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தனது பெயரையும் ஹாதியா என்று மாற்றிக் கொண்ட அவர், ஷபின் ஜஹான் என்பவரை திருமணமும் செய்துகொண்டார்.

ஆனால், இத்திருமணத்தை எதிர்த்த ஹாதியாவின் தந்தை அசோகன், ஹாதியா - ஷபின் ஜஹான் திருமண பின்னணியில் சதி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆனால், “நான் இஸ்லாமியப் பெண்; இஸ்லாமியப் பெண்ணாகவே என் கணவர் ஷபினுடன் வாழ விரும்புகிறேன்” என ஹாதியாவின் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து, இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஹாதியா படிப்பைத் தொடரலாம் என்று கூறி, அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வரையே, ஹாதியாவின் பாதுகாவலராகவும் நீதிபதிகள் நியமித்தனர்.

ஆனால், புதன்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின்போது, அதற்குப் பதிலளித்த ஹாதியாவின் தந்தை அசோகன், “என் ஒரே குழந்தையின் பாதுகாப்பும், நல்வாழ்வும்தான் எனக்கு முக்கியம்; என் மகள் இஸ்லாம் மதத்தைத் தழுவியதற்கு நான் எதிர்ப்புக் காட்டவில்லை.

ஆனால், சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமையாகிவிடக் கூடாது என்பதுதான் என் பிரதான கவலை” என்று கூறியுள்ளார்.

கடந்த 20-ஆம் தேதி இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, சேலத்தில் தன்னைவந்து சந்திக்கும் பெற்றோர், மீண்டும் இந்து மதத்திற்கு மாறச்சொல்லி, கட்டாயப்படுத்துவதாக ஹாதியா நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். தான் ஒரு இஸ்லாமியப் பெண்ணாக கணவருடன் சுதந்திரமாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாஜக தலைவர்களின் கைப்பாவையாகவே, தனது தந்தை அசோகன் செயல்படுகிறார் என்று ஏற்கெனவே பிரமாணப்பத்திரம் செய்து அவரை ஹாதியா அம்பலப்படுத்தி இருந்தார். இந்நிலையில், வியாழனன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை மார்ச் 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

More News >>