ஸ்லீப்பர் செல்கள் எப்போது வெளியே வருவார்கள் - டிடிவி தினகரன் விளக்கம்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, ஸ்லீப்பர் செல் இல்லை. அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு, தினகரனை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், “இந்த ஆட்சி கவிழக்கூடாது என்பதற்காகவே பல எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருப்பதாக கூறினார். முதல்வர், துணை முதல்வர், சில அமைச்சர்களை மக்கள் விரும்பவில்லை.

ஈ.பி.எஸ். ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆவதால் முதல்வர் பதவியை ஓ.பி.எஸ். கேட்கிறார். பதவி கிடைக்காத விரக்தியில் இருக்கும் அவர், பிரதமர் சொன்னதால் துணை முதல்வர் பதவியை ஏற்றதாக கூறியிருக்கிறார்.

இப்போது என்னை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, ஸ்லீப்பர் செல் இல்லை. அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவைப் போல பல எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

ஆட்சி தானாக கவிழும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் தேர்தல் வரவேண்டும். மேலும் பல எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வர தயாராகவே இருக்கின்றனர். அவர்கள் வந்தால் இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்" என்று கூறியுள்ளார்.

More News >>