முஸ்லிம் விரோத தேசமாக இந்தியாவை மாற்ற இந்த குடியிருப்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம்.. பாஜகவுக்கு முஸ்லிம்லீக் கண்டனம்

ஜனநாயக வழியில் போராடுபவர்களை அதிகாரத்தை வைத்து அடக்கி ஒடுக்க நினைக்கும் மத்திய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு முஸ்லிம்லீக் கூறியுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை : முஸ்லிம் விரோத தேசமாக இந்தியாவை மாற்ற இந்த குடியிருப்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம் மூலம் பாஜக துடிக்கிறது. இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் சமூக அமைதியின்மை மற்றும் உள்நாட்டு மோதல்களால் பாதிப்படைவது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. இலங்கை தமிழர் உட்பட இந்து மக்களையும் பாதிக்கும். தற்போது இந்த மசோதாவால் வடகிழக்கு பிராந்தியத்திலும் வன்முறை வெடித்துள்ளது.

இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் வாக்களித்த அவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்ளும் அதே வேளையில், அதிமுக, பாமக போன்ற தமிழக கட்சிகள் இலங்கை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வரலாற்று துரோகத்தை செய்துள்ளன.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் படுகொலை செய்யும் விதமாக மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜகவின் செயலை அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டை துண்டாட நினைக்கும் மத்திய பாஜகவின் செயலுக்கு இனி வரும் தேர்தல்களில் மக்கள் படுதோல்வியை பரிசாக அளிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. குடியுரிமை மசோதாவை திரும்ப பெற வேண்டும் என டில்லி, உத்தர பிரதேசம், தெலுங்கானா உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயக அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் துண்டுதலின் பேரில் இந்த தாக்குதலை போலீசார் நடத்தியதாக தெரிகிறது. மேலும், பொது சொத்துக்களை போலீசாரே சேதபடுத்தி விட்டு மாணவர்களின் அமைதியான போராட்டத்தை கொச்சைபடுத்தி உள்ளது. ஜனநாயக வழியில் போராடுபவர்களை அதிகாரத்தை வைத்து அடக்கி ஒடுக்க நினைக்கும் மத்திய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி அது போராட்டமாக வெடித்து நிலையில், தனது தோல்வியை ஒப்பு கொண்டு பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இனியும் காலதாமதம் செய்யாமல் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.

More News >>