பரிசுப் பொருளை திறந்துப் பார்த்தபோது சோகம்: வெடித்துnbspசிதறியதில் புதுமாப்பிள்ளை பலி

புவனேஷ்வர்: திருமணத்தில் வழங்கப்பட்ட பரிசுப் பொருள் ஒன்றை திறந்து பார்த்தபோது திடீரென மர்ம பொருள் வெடித்து சிதறியதில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒடிசா மாநிலம், பொலிங்கர் மாவட்டம், பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18ம் தேதி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 21ம் தேதி இருவருக்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாப்பிள்ளை மற்றும் பெண்வீட்டோர் மணமக்களை வாழ்த்தி பரிசுப் பொருட்களை வழங்கினர்.

இதையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை நேற்று புதுமாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் ஆர்வமாக பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பரிசுப் பொருளை திறந்தபோது திடீரென வெடித்து சிதறியது. இதில், புது மாப்பிள்ளை சேகர் சாஹூ மற்றும் அவரது பாட்டி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மணப்பெண் ரீமா காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து சடலங்களை பிரேத பரிசோதனைன்கு அனுப்பி வைத்தார். மேலும், பரிசுப் பொருளில் வெடி வைத்து அனுப்பியது யார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிசுப் பொருள் வெடித்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>