பாஜகவை பயன்படுத்தி கோடிக்கணக்கில் ராம்தேவ் நில மோசடி!

பாஜக ஆளும் மாநிலங்களில் பாபா ராம்தேவ் கோடிக்கணக்கில் மலிவு விலையில் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளது தெரியவந்துள்ளது.

சாமியார் பாபா ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற தனது நிறுவனத்தின் மூலம் பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார். குறிப்பாக, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அவரது ‘பதஞ்சலி’ நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

கடந்த 2016-17ஆம் ஆண்டில் மட்டும் ‘பதஞ்சலி’ பொருட்கள் மூலம் சாமியார் ராம்தேவ் ரூ. 9 ஆயிரம் கோடியை வருமானமாக ஈட்டியுள்ளார். இந்நிலையில், நிலமோசடி மூலம் ரூ. 300 கோடி அளவிற்கு, மக்கள் பணத்தை ராம்தேவ் அபகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பதஞ்சலி நிறுவனம் மிகவும் மோசமான நிலையில்தான் இருந்துள்ளது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, விஸ்வரூப வளர்ச்சியை அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலத்தை விற்றது என்றால், மோடி ஆட்சியில் மாநிலம்தோறும் நிலங்களை வாங்கி குவித்துள்ளது.

குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ளது. நில ஏலங்களில் பங்கேற்ற பதஞ்சலி நிறுவனத்திற்கு, நிர்ணயிக்கப்பட்ட ஏலத்தொகையை பின்னர் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் மொத்தமாக 300 கோடி வரை, மக்களின் வரிப்பணம் பதஞ்சலி நிறுவனத்திற்கு சூறைவிடப்பட்டுள்ளது. மார்க்கெட் விலையை விட 77 சதவிகிதம் குறைவாக, 2000 ஏக்கர் நிலம் வரை சாமியார் ராம்தேவ் வாங்கி இருக்கிறார். அதிகபட்சமாக மத்தியப்பிரதேசத்தில்தான் பல நூறு ஏக்கர் நிலங்களை ராம்தேவ் வளைத்துள்ளார்.

இந்த முறைகேடுகளை, ராய்ட்டர்ஸ் என்று ஆங்கில ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது. பதஞ்சலி நிறுவனத்திற்கு, பாஜக ஆளும் மாநிலங்களில் எப்படி எல்லாம் உதவி அளிக்கப்பட்டு உள்ளது என்று கண்டுபிடித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

More News >>