கொலை வழக்கில் பாரா ஒலிம்பிக் மாரியப்பனை சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

சேலம் இளைஞர் சதீஸ்குமார் மரணம் தொடர்பான வழக்கில் பாரா ஒலிக்பிக் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை எதிர் மனுதாரராக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் கார் மீது பெரிய வடக்கம்பட்டியைச் சேர்ந்த சதீஸ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தால் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதற்கு மாரியப்பன் அவர் நண்பர்களுடன், சதீஸ் குமாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு பின்னர் மாயமான சதீஸ்குமார், ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் குடும்பத்திற்கு மாரியப்பன் தரப்பிலிருந்து மிரட்டல் வருவதாகவும், அதனால் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சதீஸ்குமாரின் தாயார் முனியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இந்த வழக்கில் மாரியப்பன் தங்கவேலுவை எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பிற்கு அறிவுறுத்தி விசாரணையை அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More News >>