ஒவ்வொரு செங்கலாக உருவப்படும் - எடப்பாடியை எச்சரிக்கும் டிடிவி தினகரன்

எடப்பாடி அணியில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவப்படும். 6 எம்எல்ஏக்களை தவிர அத்தனை பேரும் எனக்கு ஆதரவாக வருவார்கள் என்று சுயேட்சை எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு டிடிவி தினகரனை நேரில் சந்தித்தார். அதன்பிறகு பேசிய தினகரன், ‘கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, ஸ்லீப்பர் செல் இல்லை. அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள். ஆட்சி தானாக கவிழும்’ என்று தெரிவித்து இருந்தார்.

இது குறித்து பதிலளித்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், ‘தினகரன் அணி தூங்கிக்கொண்டு இருக்கிறது அவர்களைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை. எங்கள் அணி பெரும்பான்மை கொண்டு பலமாக இருக்கிறது. 2021ல் கூட அதிமுக ஆட்சி அமைக்கும்’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஜெயக்குமார் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். தவளை மாதிரி ஏதாவது கத்திக்கொண்டே இருப்பார். ஆர்கேநகர் தேர்தலில் தினகரன் டெபாசிட் வாங்க மாட்டார் என்றார், ஜெயித்த பிறகு ஹவாலா முறையில் ஜெயித்தார் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு பின்னடைவு. அதை மறைக்க பேசுவார். ஜெயக்குமார்தான் அதிமுக செய்தி தொடர்பாளர் போல செயல்பட்டு வருகிறார். எடப்பாடி அணியில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவப்படும். 6 எம்எல்ஏக்களை தவிர அத்தனை பேரும் எனக்கு ஆதரவாக வருவார்கள். ஆட்சி ஆட்டம்கண்டு உள்ளது” என்றார்.

More News >>