ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமையும்: தஞ்சையில் அமைப்புக்குழுத் தலைவர் பேட்டி

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகத் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்கா வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சியில் இறங்கி, நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்கப் பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், நிதிப் பற்றாக்குறை நிலவிவந்தது.

இந்நிலையில், தமிழக அரசு 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாகத் தர ஒப்புக்கொண்டது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்னும் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்பட்டதால், பல சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக ஆசிரியர் சங்கம் ஆகியவை தொடர்ந்து நிதியுதவி வழங்கியும் சேகரித்தும் வருகின்றனர். மேலும் பல வெளிநாட்டு தமிழ்க் கல்வி நிறுவனங்களும் சங்கங்களும் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்கும் குழுவின் அமைப்புக்குழுத் தலைவர் ஜானகிராமன் வந்திருந்தார். அங்கு அவர் பேசுகையில், "ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் பலரும் ஈடுபட்டு வருகிறோம்.

கடும் உழைப்புக்கு விரைவில் பலன் கிடைக்கும். தற்போது தமிழ் இருக்கை அமைவதற்குத் தேவையான 40 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

More News >>