வரலாற்று பழியை எடப்பாடி அரசு சுமக்கும்.. சீமான் கண்டனம்

சிலர் திருப்திக்காக நெல்லை கண்ணனை உடல் நலம் குன்றியிருக்கும் பொழுது சிறைப்படுத்தியதற்கு தமிழர்களின் கடும் வன்மத்தையும், வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும் எனத் தமிழக அரசை எச்சரிக்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாஜக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறச்சீற்றத்தை வெளிப்படுத்திய தமிழ்க்கடல் அப்பா நெல்லை கண்ணனை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் ஒருசேர கட்டவிழ்த்து விடப்பட்டு மக்கள் துயருற்று நிற்கும்போது அம்மக்கள் பக்கம் நின்று அவர்களின் உரிமைக்காகக் குரலெழுப்புவதே அறம். அந்நெறிப்படி நின்று போராடிய அப்பா நெல்லை கண்ணனை கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலித்த அவரின் பேச்சை வன்முறையைத் தூண்டுவதாக உள்நோக்கம் கற்பிப்பது மடமைத்தனம்.

சமீபகாலமாக, நெல்லை கண்ணன் அவர்களது பாரதிய ஜனதாவின் கொள்கைக்கு எதிரான வலுவான வாதங்களும் பரப்புரைகளும்தான் இந்தக் கைதிற்குக் காரணம். மேடை பேச்சுகளுக்குக் கைதென்றால் பாஜகவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர்கள். மாணவர்களை நோக்கி குண்டுகள் வருமென்றும், உயர் நீதிமன்றத்தை இழித்துரைத்த எச்.ராஜா, ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி.சேகர், முதல்வரையும், துணை முதல்வரையும் 'ஆண்மையற்றவர்கள்' என விமர்சித்த குருமூர்த்தி, வருணாசிரமத்தை ஆதரித்துச் சாதிவெறியோடு பேசிய வெங்கடகிருஷ்ணன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தரைத் தாக்கிய தீட்சிதர் தர்ஷன் இவர்களையெல்லாம் கைது செய்யத் துணிவற்ற தமிழக அரசு, தமிழுக்காகவே வாழ்வினை அர்ப்பணித்த அப்பா நெல்லைக் கண்ணனை கைது செய்திருப்பது மிகப்பெரும் அநீதி. கொடுங்கோன்மை!

தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது அருந்தவப் பயனென வாழ்ந்து வரும் அப்பா நெல்லை கண்ணனை சிறைப்படுத்துவது தமிழுக்கும், தமிழருக்கும் நேர்ந்த பெருத்த அவமானம். எனவே, அவர் மீது புனையப்பட்ட வழக்குகளை ரத்துச் செய்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடில், தமிழ்ப் பெருந்தொண்டாற்றிய அப்பா நெல்லை கண்ணனை சிலர் திருப்திக்காக உடல் நலம் குன்றியிருக்கும் பொழுது சிறைப்படுத்தியதற்குத் தமிழர்களின் கடும் வன்மத்தையும், வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும் எனத் தமிழக அரசை எச்சரிக்கிறேன்.இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

More News >>