உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்கவில்லை.. தேர்தல் ஆணையர் விளக்கம்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் பல குளறுபடிகள் நடைபெறுகின்றன. திமுக வெற்றி பெற்ற இடங்களில் முடிவுகளை அறிவிக்காமல், அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்க முயற்சிகள் நடப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னையில் நேற்றிரவு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 18,570 பேரையும் சேர்த்து மாலை 5 மணி நிலவரப்படி வார்டு உறுப்பினர்கள் 19,734 பேர், ஊராட்சி தலைவர் 1141, ஒன்றிய கவுன்சிலர்கள் 208 இடங்களுக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கு பதிவான வாக்குகளை ஒவ்வொன்றாக எடுத்து வேட்பாளர்களிடம் காட்டிய பிறகே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே, எந்த முறைகேடும் நடக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக தி.மு.க. கூறிய குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை. வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடந்து வருகிறது.இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.

More News >>