உள்ளாட்சி தேர்தல் முடிவு.. இன்று அதிகாலை நிலவரம்

உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

 

தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. இதன் பின்பு, புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.இதில், 515 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டிச.27, 30 தேதிகளில் தேர்தல் நடந்தது. ஜன.2ல் வாக்கு எண்ணும் பணி தொடங்கி, மூன்றாவது நாளாக இன்று(ஜன.4) காலை வரை நீடித்தது. இன்று அதிகாலை நிலவரப்படி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 268 இடங்களையும், அதிமுக கூட்டணி 243 இடங்களையும், பிற கட்சிகள் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். அதே போல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

More News >>