உத்தரப் பிரதேசத்தில் பரிதாபம்: ரயில் இஞ்ஜின் மோதி 6 பேர் பலி

லக்னோ: தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் இஞ்ஜின் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹாபூர் மாவட்டம் பில்குவா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே உள்ள சர்வோதயா நகர் பகுதியை சேர்ந்த 7 வாலிபர்கள் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த தடத்தில் ரயில் இஞ்ஜின் வருவதை கவனிக்காத இளைஞர்கள் ரயில் அருகில் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள், தப்பிக்கலாம் என்று நினைப்பதற்குள் ரயில் இஞ்சின் அவர்களை வேகமாக இடித்துச் சென்றது. இதில், ஏழு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்கு போராடி வரும் ஒருவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கோர விபத்து, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>