ஜே.என்.யு. மாணவர்களிடம் பேச கவர்னருக்கு அமித்ஷா உத்தரவு..

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதல் தொடர்பாக மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துமாறு டெல்லி கவர்னருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

ஜே.என்.யு. மாணவர் சங்கத்தினர் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலையில் பல்கலைக்கழகத்தின் சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் விடுதிக்குள் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். இதில், மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உள்பட பலருக்கும் மண்டை உடைந்தது. காயமடைந்தவர்கள் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து, ஜே.என்.யு. மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து கொல்கத்தா, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் ஐ.ஐ.டி. மாணவர்கள் நள்ளிரவில் பேரணி நடத்தினர். இந்நிலையில், ஜே.என்.யு மாணவர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துமாறு டெல்லி கவர்னர் அனில் பைஜாலிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மேலும், டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிடமும் அமித்ஷா தொலைபேசியில் பேசி, ஜே.என்.யு. விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

More News >>