பிரதமரை அவமதித்த வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்.. செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கியது

பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் நெல்லை கண்ணனுக்கு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார்.

இதையடுத்து, இரு சமூகங்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசினார் என கூறி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயாசங்கர், மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதரிடம் புகார்கொடுத்தார். திருநெல்வேலி மேலப்பாளையம் போலீசார், நெல்லை கண்ணன் மீது இபிகோ 504, 505(2), 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை கண்ணன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, திருநெல்வேலி நடுவா் மன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், நெல்லை கண்ணன் சார்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி நசீா் அகமது, நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நெல்லை கண்ணன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று(ஜன.10) விசாரணைக்கு வந்தது. நெல்லை கண்ணன் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

More News >>