செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது!ஸ்டாலின் கேள்விக்கு பதில்.

முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் விருது ஏன் அறிவிக்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றனர். 2019ம் ஆண்டுக்கான விருதுகள் ஜன.14ம் தேதி அறிவிக்கப்பட்டன.இதன்படி, கபிலர் விருது-புலவர் வெற்றி அழகன், உ.வே.சா. விருது-வெ.மகாதேவன், கம்பர் விருது-முனைவர் சரஸ்வதி ராமநாதன், அம்மா இலக்கிய விருது-உமையாள் முத்து, அம்பேத்கர் விருது-முனைவர் க.அருச்சுனன் மற்றும் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளுடன் ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது ஏன் இந்த ஆண்டு அறிவிக்கப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். அதில் அவர், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முன், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல் இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா? அல்லது டெல்லி எஜமானர்களின் மனம் குளிர்வதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா? என்று கேட்டிருந்தார்.

இதையடுத்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 9, 10ம் தேதிகளில் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. 2019ம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் விருது அறிவிக்கப்படாதது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த விருது அறிவிப்பு வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

 

More News >>