தேசத்துரோக வழக்கில் ஹர்திக் படேல் கைது..சிறையில் அடைப்பு

குஜராத் காங்கிரஸ் இளம் தலைவர் ஹர்திக் படேல், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை வரும் 24ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குஜராத்தில் பெரும்பான்மை இனத்தவராக பட்டிதார் எனப்படும் படேல் சமூகத்தினர் உள்ளனர். இவர்கள் வர்த்தகத்தில் சிறந்து விளங்குபவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தாலும் அரசு பணிகளில் பெரிய அளவில் இடம் பெற்றிருக்கவில்லை. இதையடுத்து, தங்களுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று கோரி, நீண்ட காலமாக படேல் இனத்தவர் போராடி வந்தனர்.

கடந்த 2015ம் ஆண்டில் படேல் இனத்தவர்களின் போராட்த்திற்கு ஹர்திக் படேல் என்ற இளைஞர் தலைமை தாங்கினார். அப்போது குஜராத் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. அப்போது ஹர்திக் படேல், வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கூறி அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. குஜராத்தில் கடந்த தேர்தலின் போது, காங்கிரசில் ஹர்திக் படேல் இணைந்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். எனினும், பாஜகவே மீண்டு்ம் ஆட்சிக்கு வந்தது.

இந்நிலையில், அகமதாபாத் மாவட்டம் விராம்காம் பகுதியில் நேற்றிரவு(ஜன.18) ஹர்திக் படேலை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை அகமதாபாத் கொண்டு வந்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 24ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டடது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

More News >>