ஷீரடி நகரில் பந்த்..சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம்

ஷீரடி நகரில் இன்று பந்த் போராட்டம் நடைபெறுகிறது. எனினும், சாய்பாபா கோயில் வழக்கம் போல் திறந்திருக்கிறது. பக்தர்கள் வருகையும் குறையவில்லை.

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி சாய்பாபா கோயில் உலக பிரசித்தி பெற்றது. வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சாய்பாபா பக்தர்கள் இ்ந்த கோயிலுக்கு வருகின்றனர். அந்த மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், சாய்பாபாவின் பிறந்த இடமாக கூறப்பட்டு வரும் பார்பானி மாவட்டம் பாதிரி நகரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றவிருப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் அறிவித்தார். மேலும், அந்த நகரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி ஒதுக்கப் போவதாகவும் கூறியிருந்தார். அப்படி பாதிரி நகரை சாய்பாபாவின் பிறந்த இடமாக கருதி சுற்றுலா தலமாக மாற்றினால், ஷீரடியின் மதிப்பு குறைந்து போய் விடும் என்று உள்ளூர் மக்கள் கொதிப்படைந்தனர்.

இதையடுத்து, முதலமைச்சரின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி, இன்று முதல் ஷீரடியில் காலவரையற்ற பந்த் நடத்தப்படுகிறது. சாய்பாபா கோயிலும் இன்று மூடப்படும் என்று நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை ஸ்ரீசாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் தலைமை செயல் அதிகாரி தீபக் மதுக்குர் முக்லிகர் மறுத்தார். சாய்பாபா கோயில் மூடப்படாது, வழக்கம் போல் திறந்திருக்கும் என்று அவர் அறிவித்தார். இந்நிலையில், இன்று ஷீரடி நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எனினும், சாய்பாபா கோயில் வழக்கம் போல் திறந்திருக்கிறது. பக்தர்களின் கூட்டமும் குறையவில்லை. இதனால், சில பகுதிகளில் மட்டும் ஓரிரு கடைகள் திறந்திருக்கின்றன.

More News >>