தலைநகரை மாற்ற எதிர்ப்பு,ஆந்திராவில் பந்த்..வெறிச்சோடிய அமராவதி

ஆந்திராவில் தலைநகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமராவதி மற்றும் சுற்றுப்புறங்களில் பந்த் நடக்கிறது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, அம்மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக, தலைநகர் மண்டல வளர்ச்சி ஆணையம்(சிஆர்டிஏ) ஏற்படுத்தப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாக சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.

இதற்கு பின்னர், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் அரசு அந்த திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்தது. இதற்கு அமராவதி மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். தெலுங்கு தேசம் கட்சியும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. எனினும், ஜெகன் அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்நிலையில், ஆந்திர சட்டசபையில் நேற்று(ஜன.20) 2 புதிய சட்டமசோதாக்கள் செய்யப்பட்டன. அதன்படி, அமராவதியை தலைநகராக்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான சிஆர்டிஏ அமைப்பும் கலைக்கப்படுகிறது. மேலும், புதிதாக 3 தலைநகர்களை அமைக்கும் திட்டத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டது. இதன்படி, அமராவதியில் சட்டசபை மட்டும் இருக்கும். ராஜ்பவன், தலைமைச் செயலகம், அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் ஆகியவை விசாகப்பட்டினத்தில் இயங்கும். நீதிமன்றங்கள் அனைத்தும் கர்னூல் நகரில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டங்களில் போலீசார் தடியடி நடத்தினர். இயைடுத்து, அமராவதி கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அமராவதி பகுதியில் இன்று பந்த் நடத்தப்படுகிறது. அமராவதி மற்றும் சுற்றியுள்ள 29 கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அமராவதியில் வாகனங்கள் குறைவாகவே இயங்குகின்றன. இதனால், கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

More News >>