குரூப் 2 தேர்வு முறைகேடு.. மேலும் 3 அதிகாரிகள் கைது.. 20 ஊழியர்கள் தலைமறைவு

குரூப் 2 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த பாஜக ஆட்சியின் போது, அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. வியாபம் ஊழல் என்று நாடு முழுவதும் பேசப்பட்டு, அதுவே பாஜக ஆட்சிக்கு வீழ்ச்சியாக அமைந்தது. தற்போது அதை விட அதிகமான மோசடிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில்(டிஎன்பிஎஸ்சி) நடந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கில் இது வரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே நடைபெற்ற குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. குரூப்-2ஏ தேர்விலும் தரவரிசை பட்டியலில் முதல் 55 இடங்களுக்கு 30 இடங்களிலும், 100 இடங்களுக்குள் 37 இடங்களிலும் ராமேசுவரம் தேர்வு மையத்தில் எழுதியவர்கள் இடம்பிடித்திருந்தனர்.

இவர்களில் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், தற்போது குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த சுதாராணி, சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சுதாராணி, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். விக்னேஷ், சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத் துறையில் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இடைத்தரகர் ஜெயகுமாரின் கார் ஓட்டுநரான சம்பத் என்பவரின் மனைவி சுதாராணி என்று தெரிய வந்துள்ளது.

குரூப்-2ஏ தேர்வு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரவே, முறைகேடாக தேர்ச்சி பெற்று அரசு வேலையில் இருக்கும் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் செல்போன் எண்களில் கடந்த சில நாட்களாக அவர்கள் யார், யாருடன் தொடர்பு கொண்டனர் என்பது போன்ற விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்துள்ளனர்.

விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். அப்போதுதான், முறைகேடாக தேர்ச்சி பெற்றது எப்படி? எவ்வளவு பணம் கைமாறியது என்பது போன்ற விவரங்கள் முழுமையாக தெரிய வரும்.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமைச் செயலக ஊழியர் திருஞானசம்பந்தன், பத்திரப்பதிவு அலுவலர்கள் ஆனந்தன், வடிவு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, சமீபத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விலும் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதிலும், ஆளும்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற ஆளும்கட்சி தீவிரமாக முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே, குரூப் 2ஏ, குரூப் 1 தேர்வுகளில் நிச்சயமாக ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் ஆசியுடன்தான் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி போலீசார் எப்படியாவது ஆளும்கட்சி வி.ஐ.பி.க்களின் தொடர்புகளை மறைத்து விடுவார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது. இதனால், டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

More News >>