முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தீடீர் கைது!

தொழிலதிபர் இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஊடகம் ஒன்றுக்கு அனுமதி கொடுப்பதற்காக கார்த்தி சிதம்பரம் 90 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில் அமலாக்க துறை அவரை கைது செய்துள்ளது.

இந்திராணி முகர்ஜியின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் நியூஸ் எக்ஸ், 9X மற்றும் 9X Music ஆகிய சேனல்களை நடத்தி வருகிறது. இந்த ஊடக நிறுவனத்துக்கான முதலீட்டை 4 கோடி என்ற அளவில் குறைத்து காட்டி வெளிநாடு முதலீடு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு ப.சிதம்பரம் உதவியதாகவும், அதற்காக 90 லட்சம் ரூபாய் பணத்தை கார்த்தி சிதம்பரம் வாங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது. இதனையடுத்து கார்த்தி சிதம்பரம், இந்திராணி உள்ளிட்ட பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

இதையடுத்து, தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த பிரதான வழக்கின் விசாரணை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த பிப்.16ம் தேதி கைது செய்தனர். அதே சமயம் முன்ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்று திரும்பிய நிலையில், வழக்கின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முழு ஒத்துழைப்பு தரவில்லை என குற்றம்சாட்டிய சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் இன்று காலை கைது செய்துள்ளது.

More News >>