குஷ்புவின் சக்களத்தி யார் தெரியுமா? அவரே வெளியிட்ட ருசிகரம்...

சுந்தர்.சி தயாரிக்க ஹிப் ஆப் தமிழா ஆதி நடித்துள்ள படம் நான் சிரித்தால். ராணா இயக்கி உள்ளார். இப்படம் வெளியாகி வெற்றிப் பெற்றதையடுத்து படக் குழுவினர் விழா கொண்டாடினார்கள்.

இதில் ஹீரோ ஆதி பேசும்போது,'இப்படத்தின் வெற்றி அன்பால் மட்டுமே கிடைத்திருக்கிறது. அன்று முதல் இன்று வரை எனது ரசிகர்கள் ஆதரவளித்து வருகிறார்கள். இயக்குநர் சுந்தர்.சியுடனான உறவு எப்படி வளர்ந்தது என்று தெரிய வில்லை. அவர் என்மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நான் பள்ளியில் படிக்கும்போது 'ராப்' பாடல் தான் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது எனது ஹிப் ஹாப் பாடலையும் ரசிக்கிறார்கள். இப்படத்தில் சிரிப்பு வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்தார். அவர் நடித்தது படத்திற்கு பலம். திட்டுவதாக இருந்தாலும், பாராட்டுவதாக இருந்தாலும் மனதில் இருப்பதை நேரடியாகக் கூறிவிடுவார். ஹிப் ஹாப் தமிழா என்பது நான் மட்டுமல்ல. நானும் எனது நண்பன் ஜீவா இருவரும். ஆனால், அவரைப் பற்றிப் பேசுவதை அவர் விரும்பமாட்டார். ஹிப் ஹாப் தமிழாவின் வெற்றிக்கு ஜீவா தான் முதுகெலும்பு. எனக்குப் பல கனவுகள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நனவாக்கி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் அனைவரின் கனவும் நனவானதில் மகிழ்ச்சி' என்றார்.

சுந்தர் சி.மனைவியும் படத்  தயாரிப்பு நிர்வாகியுமான நடிகை குஷ்பு பேசும்போது, 'இதுபோன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. அவ்னி மூவிஸ் என்பது எனக்கும் சுந்தர்.சி-க்கும் கனவு. ஏனென்றால், எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். அவ்னி மூவிஸ்-ன் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான். நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம். ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால்தான். அவள் தான் ஹிப் ஹாப் தமிழா ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்களத்தி ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால்  நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். கே.எஸ்.ரவிக்குமாருடன் நீண்ட நாள் நட்பு இருக்கிறது. இப்படத்தின் வெற்றி ஒவ்வொருவரும் அடுத்தவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாமல் அனைவரும் காப்பாற்றுகிறார்கள். இன்றைய காலத்தில் நகைச்சுவையில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பவர் யோகிபாபு. ஆனால், நாங்கள் அழைத்ததும் உடனே ஒப்புக் கொண்டார். எங்களுக்குக் கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றைச் சொல்லும் படம் எடுப்பதைவிட அனைவரையும் மகிழ்விக்கும் படமாக எடுக்க வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம்.  என்னுடைய வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருக்கும் எனது கணவர் சுந்தர்.சி. தான் காரணம்' என்றார்.

நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி, ரவிமரியா,  படவா கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

More News >>