காஜல் அகர்வால், ரகுல், பிரசன்னா அதிர்ச்சி.. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல்..

கமல், காஜல் அகர்வால் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நேற்று சென்னை அடுத்துள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பில் கிரேன் முறிந்து விழுந்ததில் 3 பேர் இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 3 சகாக்களை இழந்துவிட்டேன் என ஹீரோ கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் படக் கதாநாயகி காஜல் அகர்வால் 'என்னுடன் பணியாற்றிய கிருஷ்ணா, சந்திரன், மது விபத்தில் இறந்துவிட்ட துயரத்தையும், நான் உணரும் மன வேதனையையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகை ரகுல் ப்ரீத் சிங், 'இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏற்பட்ட இழப்பை எப்படி வார்த்தைகளால் சொல்வதென்று தெரியவில்லை. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். இது மிக மிகச் சோகமானது' எனக் குறிப்பிட்டுள்ளார்.நடிகர் பிரசன்னா கூறும்போது, 'துயர செய்தியுடன் இது ஒரு சோகமான காலையாகிவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என ட்வீட் செய்துள்ளார்.

மேலும் நடிகர் ஆர்யா, நடிகைகள் வரலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் எனத் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தியன்2 விபத்து குறித்து அதிர்ச்சியும் துயரமும் வெளியிட்டிருக்கின்றனர்.

More News >>