திருப்பதி லட்டு உருவான வரலாறு

திருப்பதி ஏழுமலையான் கோவில் என்றாலே, நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அங்கு பிரசாதமாக கொடுக்கப்படும் 'லட்டு' தான். அந்த 'லட்டு' உருவான வரலாற்றை இங்கு தெரிந்துகொள்வோம்...

கி.பி.830ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர்கள் ஆட்சி காலத்தில், ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல வேண்டுமென்றால் பல நாட்கள் ஆகும். தரிசித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு, பிறகு ஊர் திரும்புவது வழக்கம்.

அவர்கள் திரும்பி வீடுக்குச் செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோவில் பிரசாதமாக வழங்கப்பட்டது.

கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள்.

1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.

1803ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக விற்பனையானது. 1940ஆம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை அமலானது.

ஆரம்பத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு ஒன்று எட்டு அணாவிற்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு லட்டு விலை ரூ.25 ஆக உள்ளது. இதன் பெயர் ‘ப்ரோக்தம் லட்டு’.

இது தவிர, கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் "கல்யாண உற்சவ லட்டு" வழங்கப்படுகிறது, ஒரு லட்டு ரூ.100க்கு விற்கப்படுகிறது.

More News >>