மத்தியப் பிரதேசத்தில் 8 எம்.எல்.ஏ.க்களை கடத்தியது பாஜக..

மத்தியப் பிரதேசத்தில் ஆளும்கட்சிக்கு ஆதரவான 8 எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்திச் சென்று அரியானாவில் உள்ள ஓட்டலில் தங்க வைத்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக இந்த வேலையில் இறங்கியுள்ளனர்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கோவா, மணிப்பூர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, பாஜக ஆட்சியைக் கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், அதையெல்லாம் பிரதமர் மோடியோ, கட்சித் தலைவராக இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பொருட்படுத்தவும் இல்லை. வெட்கப்படவும் இல்லை.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையை பாஜக தொடங்கியுள்ளது. சிஏஏ போராட்டம், டெல்லி வன்முறை போன்ற பல்வேறு பிரச்சினைகளைத் திசை திருப்பும் வகையிலும், ம.பி.யில் ராஜ்யசபா தேர்தலில் கூடுதலாக ஒரு இடத்தை பிடிக்கும் வகையிலும் இ்ந்த ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ம.பி.யில் மொத்தம் உள்ள 230 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரசுக்கு 113, பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள், ஒரு சமாஜ்வாடி உறுப்பினர் 7 பேர் கமல்நாத் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரசுக்கு ஒரு இடமும், பாஜகவுக்கு ஒரு இடமும் எளிதாகக் கிடைக்கும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சுயேச்சைகள் ஆதரவில் காங்கிரசுக்கு 2வது இடம் கிடைக்கும்.

தற்போது 2வது இடத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. மேலும், கமல்நாத் அரசைக் கவிழ்க்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காகக் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் என 8 எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி விட்டதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அவர்களுக்கு தலா ரூ.25 கோடி கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் நேற்று(மார்ச்3) இந்த குற்றச்சாட்டை கூறினார்.

இதைத் தொடர்ந்து, ம.பி. கல்வி அமைச்சர் ஜித்து பட்வாரி கூறுகையில், எட்டு எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்திச் சென்றுள்ளனர். முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், முன்னாள் அமைச்சர்கள் நாரோட்டம் மிஸ்ரா, புபேந்திரசிங் ஆகியோர் அந்த 8 பேரையும் கடத்திச் சென்று அரியானாவில் குர்கானில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றார்.

இந்நிலையில், ம.பி.யில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சிஏஏ சட்டம், டெல்லி வன்முறை போன்ற விஷயங்களிலிருந்து அனைவரையும் மத்திய அரசு திசைதிருப்பி விடும் என்பதும் தெரிந்த விஷயம்தான்.

More News >>