எம்.எல்.ஏ.க்களை கடத்தி பாஜக குதிரைப்பேரம்.. கவர்னரிடம் கமல்நாத் புகார்..

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்று, பாஜக குதிரைப்பேரம் நடத்துவதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் கமல்நாத் புகார் கொடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. காங்கிரசைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறினர். அவர்கள் பெங்களூருவில் உள்ள ஓட்டலுக்குச் சென்று தங்கினர். அவர்களை பாஜக கடத்தி விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.இதற்கிடையே, கமல்நாத் மீது அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா திடீரென பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, காங்கிரசிலிருந்து விலகுவதாகச் சோனியாவுக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டார்.

இதையடுத்து, பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த 22 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாகவும், காங்கிரசிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தனர். அடுத்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் ஜோதிராதித்ய சிந்தியா சேர்ந்தார். அவருக்கு உடனடியாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சீட் தரப்பட்டது. இதன்பின்பு, 22 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் கொண்டு வந்து சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர். இதைப் பெற்ற சபாநாயகர், அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவர்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்கிறார்களா அல்லது யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரில் விலகுகிறார்களா என்று கேட்டு, அதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கூறியுள்ளார்.

இந்நிலையில், போபாலில் முதல்வர் கமல்நாத் இன்று(மார்ச்13) காலை ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் லால்ஜிடாண்டனை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ஒரு கடிதம் அளித்தார். அதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி வைத்துள்ளதாகவும், குதிரைப்பேரம் நடத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை விடுவிக்க பாஜகவுக்கு உத்தரவிடுமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேரில் வந்து சபாநாயகரிடம் விளக்கம் கொடுப்பார்களா அல்லது சபாநாயகர் விரைவில் முடிவெடுக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்திற்குச் செல்வார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

More News >>