இந்தியாவில் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பரவும் வேகம் குறைந்தது..

உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கி 7007 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உள்ளது. இந்தியாவில் 126 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் முதன் முதலாகக் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் பரவியுள்ள இந்த நோய் தாக்குதலில், அந்நாட்டில் மட்டும் இது வரை 3,226 பேர் உயிரிழந்துள்ளனர். 80,881 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்ததில், 68,679 பேருக்குக் குணமாகியுள்ளது.

உலகம் முழுவதும் 135 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2158 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். அங்கு 7007 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் சற்று குறைந்துள்ளது. இது வரை 126 பேருக்கு இந்த நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கர்நாடகா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர், லடாக், கேரளா ஆகிய மாநிலங்களில் புதிதாக ஓரிருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. மொத்தம் 5,200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனையில் உள்ளனர். இது வரை இந்தியாவில் 2 பேர் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.

More News >>