கமல் முயற்சியை கையிலெடுக்கும் இளம் இயக்குனர்.. எதிர்ப்பு வருமா?..

துருவங்கள் பதினாறு என்ற படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் முதல் படத்திலேயே பேசப்பட்டார். அவரது அடுத்த படம் பற்றி எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கவுதம் மேனன் நிறுவனத்துடன் இணைந்து நரகாசூரன் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடித்திருக்கின்றனர். இப்படம் முடிவதற்குள் கவுதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படம் முடிந்து வருடக்கணக்கில் ஆகியும் ரிலீஸ் ஆகாமலிருக்கிறது. இப்படத்திற்கு பிறகு அருண் விஜய், பிரசன்னாவை வைத்து கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்நிலையில் நரகாசூரன் கதி என்னவாயிற்று, எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருக்கிறார்கள். இதையடுத்து நரகாசூரன் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடலாமா என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார் நரேன். அதற்கு வெளியிடலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கமல்ஹாசன் ஒருமுறை படங்களை முதலில் டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டு விட்டு பிறகு திரை அரங்குகளில் வெளியிட உள்ளதாகக் கூறினார். அதேபோல் சேரன் இயக்கிய படமொன்றும் டிஜிட்டல் தளத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கமல், சேரனின் முயற்சிகள் கைவிடப்பட்டன- இந்நிலையில் கார்த்திக் நரேனின் நரகாசூரன் டிஜிட்டல் தளத்தில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு வருமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
More News >>