கொரோனா ஊரடங்கு.. 80 கோடி மக்களுக்கு 5 கிலோ இலவச அரிசி..

நாட்டில் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி, கோதுமை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இந்தியாவில் 21 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு பொருளாதார உதவிகள் அளிப்பது குறித்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அன்னயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி, கோதுமை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இத்துடன் இலவசமாக தலா 5 கிலோ கோதுமை, அரிசி வழங்கப்படும். இத்துடன் 1 கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன்தொகை இரட்டிப்பாக்கி, ரூ.20 லட்சமாக வழங்கப்படும்.

மேலும், 8 லட்சத்து 69 ஆயிரம் விவசாயிகளுக்கு நேரடி பணபரிவர்த்தனை மூலம் ஏப்ரல் முதல் வாரத்தில் ரூ.2 ஆயிரம் உதவி வழங்கப்படும். அதே போல், முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு 2 தவணகைளில் கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும். ஏழைகளுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்கப்படும்.நூறு ஊழியர்களுக்கு குறைவாக உள்ள கம்பெனிகளில் பணியாற்றுவோருக்கான தொழிலாளர் வைப்பு நிதி சந்தா(பி.எப்)வில் கம்பெனி மற்றும் ஊழியரின் பங்கை மத்திய அரசே 3 மாதங்களுக்கு செலுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More News >>