பரவை முனியம்மாவை நினைத்து அபி சரவணன் உருக்கம்..

அட்டகத்தி, கேரள நாட்டிளம் பெண்களுடனே, குட்டிப்புலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அபி சரவணன். இவர் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்.

அவர் இறந்த செய்தி அறிந்து கதறி அழுதார். அவரது இறுதிச் சடங்கில் நேரில் சென்று கலந்துகொண்டார். இது பற்றி அவர் முக நூலில் அஞ்சலி செலுத்திக் கூறியிருப்பதாவது :அன்று அதிகாலை இரண்டு மணியளவில் பரவை முனியம்மா வீட்டிலிருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகத் தகவல் வந்தது.உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. அதிர்ந்துபோனேன்.. உடைந்து போனேன்.. அப்பத்தாவின் இறுதி மூச்சு பிரிந்ததை அறிந்து இறுக்கத்துடன் கிளம்பினேன் .ஒரு மாலை கூட வழியில் வாங்க இயலாத கையாலாகாத பேரனாய் பரவை முனியம்மா பாட்டியைப் பார்க்கச் சென்றேன்.

சென்ற வழி எல்லாம் நினைவுகள் அபி அபி என்று அழைத்த அந்த ஆறுதலான வார்த்தைகள், அன்பான சிரிப்பு. இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில் வைத்திருந்த போது கூட அபி தைரியமாக கோர்ட்டுக்கு சென்று வா. அப்பாத்தா நான் இருக்கிறேன் எதுவானாலும் பார்க்கலாம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் கொடுத்தார். இன்று உயிரோடு இல்லை.இறுதி ஊர்வலம் இடுகாடு இறுதி மரியாதை இன்றுடன் எல்லாமே முடிந்தது.கண்ணீருடன் பேரன் அபி சரவணன்.

இவ்வாறு கூறி உள்ளார்.

More News >>