தமிழகத்தில் கொரோனா பலி 5 ஆக உயர்வு.. 485 பேருக்கு நோய்ப் பாதிப்பு

தமிழகத்தில் இது வரை 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 7 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழகத்தில் இன்று காலை வரை 485 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 7 பேர் பூரண குணமடைந்து விட்டனர். அதே சமயம், இது வரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த மார்ச் 25ம் தேதியன்று, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது கொரோனா நோயாளி முதன் முதலாக உயிரிழந்தார். அவர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்பதும், அங்குத் தாய்லாந்து நாட்டினர் மூலம் அவருக்கு கொரோனா பரவியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகுதான், அம்மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சோதனை செய்யப்பட்டனர். அதில், 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதற்கிடையே, விழுப்புரத்தில் நேற்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். விழுப்புரம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் (51) என்பவரே பலியானவர். இவரும் நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்தான். கொரோனா தொற்று காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். விழுப்புரம் சிங்காரத்தோப்பு மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த 21 பேர், டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்குச் சென்று விட்டுத் திரும்பியிருந்தனர். அவர்களில் தந்தை, மகன் மூலமாக 53 வயது தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் தாய் நேற்று பலியானார்.இதன் தொடர்ச்சியாக, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கீழக்கரையைச் சேர்ந்த 71வயது முதியவரும் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்த முதியவர் துபாயிலிருந்து சமீபத்தில் திரும்பி வந்தவர் எனத் தெரிய வந்தது.மேலும், கொரோனாவால் பாதித்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர், இன்று அதிகாலையில் உயிரிழந்தார். இவரும் நிஜாமுதீன் மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர் என்று தகவல் வெளியானது.

More News >>