டாஸ்மாக் கடைகள் மூடல்.. தினமும் 80 கோடி இழப்பு.. அமைச்சர் தங்கமணி பேட்டி

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், தினமும் அரசுக்கு ரூ.80 கோடி இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தின் மின்சாரத் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 10 ஆயிரம் மெகாவாட் ஆகக் குறைந்துள்ளது.

ஊரடங்கு அமலிலிருந்தாலும் 90 சதவீத மின்சார வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஊரடங்கால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அரசுக்குத் தினமும் ரூ.80 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது ஊரடங்கு காரணமாக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி, அரிசி, பருப்பு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் நிதிநெருக்கடிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமாளித்து வருகிறார். மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறுவதற்கு முதல்வர் முயற்சித்து வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

More News >>