மருத்துவமனையில் ஜெயலலிதா பார்த்தவர்கள் யார்? யார்? - ஜெய் ஆனந்த் பரபரப்பு பேட்டி

அம்மா மருத்துவமனையில் இருந்த போது சின்னம்மா, மற்றும் டாக்டர் சிவக்குமார் போன்ற எங்க உறவினர்களில் டாக்டர்கள் 2, 3 பேர் மட்டும் தான் பார்த்தார்கள் என்று சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறியுள்ளார்.

ஜெய் ஆனந்த் ’போஸ் மக்கள் பணி இயக்கம்’ என ஒரு இயக்கத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றப்பயணம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயக்க பிரதிநிதிகளை சந்தித்த பிறகு மாலை புதுக்கோட்டையில் இயக்க பிரதிநிதிகளை சந்திக்க வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் ஆனந்த், "போஸ் மக்கள் பணி இயக்கம் என்பது சேவை இயக்கம் மட்டுமே. எந்த காலத்திலும் இந்த இயக்கம் அரசியல் இயக்கமாகாது. இந்த இயக்கம் கூட தினகரன் ஆதரவோடு அவரின் தலைமையில் இயங்கும் இயக்கம் தான். இந்த இயக்கம் தேர்தலை சந்திக்காது. நானும் தேர்தலை சந்திக்கமாட்டேன்.

அம்மா மருத்துவமனையில் இருந்த போது சின்னம்மா, மற்றும் டாக்டர் சிவக்குமார் போன்ற எங்க உறவினர்களில் டாக்டர்கள் 2, 3 பேர் மட்டும் தான் பார்த்தாங்க. முதலமைச்சர், அமைச்சர்கள் போன்றவர்கள் எல்லாம் வார்டு கதவு கண்ணாடிக்கு அந்தப் பக்கமே நின்று டாக்டர்களிடம் கேட்டுகிட்டு போய்விடுவார்கள். அவர்கள் யாரும் பார்க்கவில்லை.

விசாரணை ஆணையம் அமைக்கிறதுக்கு முன்னால வீடியோ ஆதாரம் வெளியிடுவேன் என்று சொன்னேன். இப்பொழுது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. வீடியோக்களையும் சம்மந்தப்பட்டவர்களே ஆணையத்திடம் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு விசாரணைக்கு அழைப்பு இல்லை. அழைத்தால் ஆஜராவேன்.

துரோகத்தின் வலி என்பது எங்களுக்கு இல்லை. யாராலும் எங்களுக்கு வலிக்க வைக்க முடியாது. அது அவர்களுக்கு தான் வலிக்கும். அந்த வலியை இனி உணர்வார்கள். முன்பு அவர்கள் செய்த தவறுகளுக்கு எங்களை கை காட்டிவிட்டு போனார்கள். ஆனால் இப்பொழுது இல்லை. அதனால் எங்களுக்கு விடுலையாகத் தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

More News >>