40 ஆயிரம் கொரோனா பரிசோதனை கருவிகள்.. டாடா குரூப் வழங்கியது

தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக 40,032 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் அளித்தது. இதற்காக அந்நிறுவனத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று வரை 1204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 12 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் 28,711 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். அரசு கண்காணிப்பில் 135 பேர் உள்ளனர். தற்போது 16 அரசு லேப் மற்றும் 9 தனியார் லேப்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் தினமும் சராசரியாக 2 ஆயிரம் பேருக்குத்தான் பரிசோதனை செய்யப்படுகிறது.

எனவே, ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதா என 30 நிமிடத்தில் பரிசோதனை செய்யும் துரிதப் பரிசோதனைக் கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) 4 லட்சம் வாங்குவதற்குச் சீனா கம்பெனிகளிடம் தமிழக அரசு ஆர்டர் செய்திருந்தது. இவை கடந்த 10ம் தேதி வந்து விடும் என்றும் எல்லா மாவட்டங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகமானோருக்குச் சோதனை செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனால், சீனாவிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்டிங் கருவிகள், அமெரிக்காவுக்குப் போய் விட்டது. தற்போது அடுத்து வருவதும் மத்திய அரசின் மூலம்தான் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா (நோய் எதிர்ப்பாற்றல்) பிரித்தெடுக்கப்பட்டு, அதைக் கொண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40, ஆயிரத்து 32 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிலையில், ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் கருவிகளை(கொரோனா பரிசோதனை கருவி) டாடா நிறுவனம் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. இதற்காக டாடா குழுமத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

More News >>