கொரோனா ஊரடங்கால் மதுரை சித்திரைத் திருவிழா ரத்து

கொரோனா ஊரடங்கு காரணமாகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த விழாவுக்குப் பக்தர்கள் வருவார்கள். மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்றவை இந்த திருவிழாவின் முக்கிய அம்சங்கள். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது.

அதே போல், மே 2ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 3ம் தேதி திக்விஜயம், 4ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், 5-ம் தேதி தேரோட்டமும் நடைபெற இருந்தது. அதன் தொடர்ச்சியாக, அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு 5ம் தேதி புறப்படுவதாகவும், 6ம் தேதி தல்லாகுளத்தில் எதிர்சேவையும், 7ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், தற்போது கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்க கூட்டம் சேர்க்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மதுரை சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.இது குறித்து, மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஊரடங்கு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது.

அதே சமயம், பக்தர்களின் திருப்திக்காகவும், தலபுராணத்தின் படியும், திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் நடைபெறும். நித்திய பூஜைகளுடன் சேர்த்து வருகிற மே 4-ம் தேதி காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ சுவாமிகள் எப்போதும் எழுந்தருளும் சேத்தி மண்டபத்தில் 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரியப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைப்பார்கள்.

இந்நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், www.maduraimeenakshi.org என்ற இணையதளம் மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தின் போது, திருமணமான பெண்கள் புதிதாக திரு மாங்கல்ய மங்கல நாண் அணிந்து கொள்ளும் மரபு உள்ளது. அவ்வாறு அணிந்து கொள்ள விரும்பும் தாய்மார்கள் தங்கள் இல்லத்திலேயே வழிபாடு நடத்தி புதிய மங்கலநாண் மாற்றிக்கொள்ளக் காலை 9.05 முதல் 9.29 மணி வரை உகந்த நேரம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், கள்ளழகர் கோயில் சித்திரை விழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுமா என்பதும் சந்தேகமாக உள்ளது. அவையும் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதே போல், தஞ்சாவூரில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உள்பட மற்ற கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

More News >>