மகளிர் குழுக்களிடம் முகக் கவசம் வாங்கும் ஆந்திர மாநில அரசு..

ஆந்திராவில் கொரோனா வைரஸ் நோய் தாக்காமல் பாதுகாப்பதற்குத் தேவையான முகக் கவசங்களை மகளிர் குழுக்கள் தயாரித்து வழங்குகின்றன. இதற்கான உத்தரவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பிறப்பித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு நோயாளிகள் மட்டுமல்ல, எல்லோருமே முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

ஆனால், ஜனவரி இறுதியில் கேரளாவில் இந்நோய் அறிகுறி தென்பட்டதுமே அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் ஒன்றாக, மகளிர் குழுக்கள் அனைத்திடமும் சாதாரண துணியால் தைத்த முகக் கவசங்களைத் தயாரித்துத் தருமாறு ஆர்டர் கொடுத்தார். இதனால், ஊரடங்கு சமயத்தில் பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருமானமும் கிடைத்தது. முகக் கவசங்களும் அதிகமாகக் கிடைத்தன.

அதைப் பார்த்து தமிழகத்திலும் அதே போல் செய்ய வேண்டுமென்று அரசுக்குப் பத்திரிகையாளர்கள் உள்படப் பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், எல்லாமே தங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்ற அதிமேதாவி எண்ணம் கொண்ட எடப்பாடி பழனிசாமி அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. மாறாக, நோயாளிகளும், டாக்டர்களும் மட்டுமே முகக் கவசம் அணிய வேண்டுமென்று கூறியது. இதனால், முகக் கவசங்கள் போதிய அளவில் தயாரிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ரூ.3க்கு விற்கப்பட வேண்டிய சாதாரண முகக் கவசம் ரூ.25 வரை விற்கப்பட்டது.

இது மக்களால் விமர்சிக்கப்படவே, அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி அரசு எச்சரிக்கை விடுத்தது. முகக் கவசமே அணிய வேண்டாமென்று சொன்ன அதே அதிமேதாவி அரசு இப்போது, முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.500 அபராதம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை எல்லாம் மறந்து விடுங்க. இப்போது விஷயம் என்னவென்றால் கேரளாவைப் போல் ஆந்திராவிலும் மகளிர் குழுக்கள்தான், முகக் கவசங்களைத் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

இது பற்றி, அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள மகளிர் குழுக்களுக்கு முகக் கவசங்கள் தயாரித்து அளிக்க ஆர்டர்கள் தரப்பட்டுள்ளது. ஒரு முகக் கவசம் ரூ.3.50க்கு தைத்துத் தருகிறார்கள். இதன் மூலம், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு நாளைக்கு ரூ.500 வரை கிடைக்கிறது. இது வரை ஏழரை லட்சம் முகக் கவசங்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை சிவப்பு மண்டலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து எல்லா பகுதிகளுக்கும் தரப்படும். முதல்வர் ஜெகன் மோகன் நேரடியாக முகக் கவசம் தயாரிக்கும் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார் என்று தெரிவித்தார்.

More News >>