கொரோனாவுக்கு பின் செய்ய வேண்டியது என்ன? கமல்ஹாசன் தரும் யோசனைகள்..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.அவர் கூறியிருப்பதாவது:இரண்டாம்‌ உலகப்போருக்கு‌ பின்‌ மனித இனத்துக்கு வந்திருக்கும்‌ இந்த பேராபத்தை எதிர்கொள்ள நம்மை ஆள்பவர்கள்‌ எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள்‌, எப்படிக்‌ கையாளப்‌ போகிறீர்கள்‌ என்ற கேள்விகளுடன்‌ நமது பிரதமருக்கு நான்‌ எழுதிய கடிதத்திற்கான வரவேற்புக்கு நன்றி. இந்தியத் திருநாட்டின்‌ பொறுப்புள்ள குடிமகனாக ஜனநாயக ஆட்சி சரியான முறையில்‌ நடக்கிறதா எனக் கண்காணிக்கும்‌ பொறுப்பு நம்முடையது, ஏனெனில்‌ அதிகாரத்தை வழங்கியவர்கள்‌ நாம்‌. அந்த கடமையை நாம்‌ தொடர்ந்து செய்வோம்‌.

ஆனால்‌ இந்த கட்டுரை கொரோனா நோய்த்‌ தொற்றை நாம்‌ முறியடித்த பின்னர்‌, இந்த ஊரடங்கு பாதிப்பால்‌ வரும்‌ பொருளா தார பிரச்சினைகளால்‌, நம்‌ தேசம்‌ எதிர்கொள்ளப்‌ போகும்‌ கேள்விகளைப்‌ பற்றியது.நிலைமையைக் கையாண்ட விதத்தைப்‌ பற்றி விமர்சனங்கள்‌ இருந்தாலும்‌, கட்சி பேதங்களை விடுத்து அனைத்து மாநில அரசுகளும்‌ ஒன்றுடன்‌ ஒன்று இணைந்தும்‌, மத்திய அரசுடன்‌ கைகோர்த்தும்‌ செயல்படுவது, வரவேற்க வேண்டிய ஒன்று. இந்த ஆரோக்கியமான பழக்கம்‌, கொரோனா பாதிப்புக்குப் புலம்பெயர்‌ தொழிலாளர்‌ பிரச்சினை, பெண்கள்‌ பாதுகாப்‌பு, சுகாதார பிரச்சி னைகள்‌ ஆகிய நீண்ட கால பிரச்சனைகளுக்கு சுமூக மான முடிவுகளை எட்ட வேண்டும்‌ என்பது என்‌ ஆசை. சுகாதாரம்‌ என்று சொல்லும்‌ போது, கொரோனாவுக்கு பின்‌ இந்தியாவை புனரமைக்கும்‌ திட்டத்தில்‌ முதலில்‌ நாம்‌ கவனம்‌ செலுத்த வேண்டியது சுகாதாரத்துறையின்‌ மேல்‌தான்‌.

இந்தியா முழு வீச்சில்‌ போரில்‌ ஈடுபட்டது 50 ஆண்டுகளுக்கு முன்னர்‌. ஆனால்‌ சுகாதாரமில்லாததால்‌ உயிரிழப்பவர்கள்‌, வருடத்துக்கு 16 இலட்சம்‌ பேர்‌. இந்த நிலையிலும்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ நாட்டின்‌ பாதுகாப்புக்கான நிதி என்பது நாட்டின்‌ ஆரோக்கியத்தை பாதுகாக்கும்‌ நிதியை விட அதிகரித்துக்‌ கொண்டே செல்கிறது. 2020-21ஆம்‌ ஆண்டுக்கான பட்ஜெட்டில்‌ நமது நாடு பாதுகாப்புக்கு ஒதுக்கியிருப்பது ₹471,378 கோடிகள்‌. இந்தியாவின்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ சுமார்‌ 2%. ஆனால்‌ நம்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ மருத்துவத்துறைக் கான நிதி, 1 சதவிகிதத்தைச் சுற்றித்தான்‌ கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறது.

உண்மையான தேசப்பற்று என்பது முதலில்‌ ஒட்டு மொத்த தேசத்தின்‌ ஆரோக்கியத்தை காப்பதில்‌ பெருமை கொள்வதே ஆகும்‌. அதன்பின்‌ தான்‌ பொருளாதாரமும்‌, பாதுகாப்புத்துறையும்‌ இருக்க வேண்டும்‌. பாதுகாப்புத்துறை நாட்டிற்கு நல்லது என்றாலும்‌, வைரஸ்‌, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள்‌ அதைப் பொருட்படுத் தாது. அதனால்‌ தான்‌ இந்தியா பேரிடர்‌, பெரு நோய்‌ காலத்திற்கென, அதிகப்படியான நிதியைத் தனியாக ஒதுக்கீடு செய்து முன்னேற்பாடுகளைச் செய்வது உடனடி தேவையாகிறது.

வல்லரசாகும்‌ கனவையும்‌, பெரும்‌ மக்கள்‌ தொகையும்‌ கொண்ட நாடு தனது சுகாதாரத்தை காக்கும்‌ பொறுப்பில்‌ இவ்வளவு பலவீனமாக இருக்கக் கூடாது. கொரோ னாவுக்குப்‌ பின்‌ இயங்கப்‌ போகும்‌ உலகம்‌, இந்தியாவின்‌ புகழ்பெற்ற விவசாயத் துறைக்கு ஒரு மிகப்பெரும்‌ வாய்ப்பு. காந்தி அவர்கள்‌ சொன்னது போலக் கிராமங்களில்‌ தான்‌ இந்தியாவின்‌ உயிர்‌ உள்ளது. இந்தியாவின்‌ புகழ்பெற்ற விவசாயம்‌, வளர்ந்து வரும்‌ விஞ்ஞான தொழில் நுட்பங்களையும்‌ இணைக்க வேண்டிய நேரம்‌.

விவசாயத்துறையில்‌ வேலை செய்பவர்களில்‌ 80% பெண்கள்‌. பசுமைப் புரட்சியினால்‌, நடவு, அறுவடைக் காலம்‌ தவிரப் பிற காலங்களில்‌ ஏற்படும்‌ வருமான இழப்பைத்‌ தடுப்பது, தனிப்பட்ட பெண்கள்‌ பொருளாதாரத்தை மட்டுமல்ல, வீட்டின்‌ மற்றும்‌ நாட்டின்‌ பொருளா தாரத்துக்கும்‌ மிகப்பெரிய ஊக்கம்‌ அளிக்கும்‌. பொருளாதாரப்‌ புரட்சிக்கு, விவசாய வளர்ச்சியை விடச் சிறந்த தொடக்கம்‌ கிடைக் காது. உழவுக்கு வந்தனை செய்யும்‌ நேரம்‌ இது.

இந்தியாவின்‌ பொருளாதாரத்தை வலுப்படுத்தும்‌ உழைக்கும்‌ மக்களில்‌ 80% அமைப்பு சாரா தொழிலாளர்கள்‌. ஐரோப்பிய யூனியனின்‌ 14%, வடக்கு அமெரிக்காவின்‌ 20% , கிழக்கு ஆசியாவின்‌ 26% (சீனா தவிர்த்து), சீனாவின்‌ 50-60% உடன்‌ பார்க்கும்‌ போது, இந்தியாவை உலக அளவில்‌ பொருளாதார வளர்ச்சியில்‌ 5வது நாடாக உயர்த்தியிருக்கும்‌, இந்த மிகப்பெரும்‌ சக்தியை நாம்‌ கவனிக்கத்‌ தவறிவிட்டோம்‌ என்பது தான்‌ வேதனையான விஷயம்‌. வேலைக் கான உத்தரவாதமோ, தொழிலாளர்‌ நல விதிகளின்‌ பாதுகாப்போ, ஓய்வூதியமோ, காப்பீட்டுத்‌ திட்டமோ, விடுமுறையோ இன்றி பொருளாதாரத்தைக் கட்டமைக்கும்‌, இவர்கள்‌ நலனில்‌ அக்கறை கொண்டு ஒழுங்குபடுத்துதல்‌ என்பது இன்னும்‌ நடக்கவேயில்லை.

அதே நேரத்தில்‌ வீட்டிற்குள்‌ அயராது உழைக்கும்‌, இல்லத்தரசிகள்‌ மீதான நம்‌ சமூகப்பார்வையும்‌ மாற வேண்டும்‌. வீட்டின்‌ வேலைகளும்‌, பொருளாதாரத்துக்கு முக்கியமான வேலைதான்‌ என்று, அவர்கள்‌ செய்யும்‌ பணிக்கு அங்கீகாரம்‌ வழங்க வேண்டும்‌. செலவினங்கள்‌ போக மீதமிருக்கும்‌, மிகக் குறைந்த பட்ச சேமிப்பை, தனது சாதனையாக வைத்திருக்கும்‌ இல்லத்தரசிகளுக்கு, வீட்டில்‌ அவர்கள்‌ செய்யும்‌ வேலைக்கே ஊதியம்‌ என்பது அவர்கள்‌ சேமிப்பை உறுதி செய்யும்‌. சேமிப்பு என்பது எல்லா வகையான நெருக்கடி நேரங்களிலும்‌ உதவக்‌ கூடியது.

நம்‌ நாட்டின்‌ பல்வேறு இடங்களில்‌ இருக்கும்‌ புலம்பெயர்‌ தொழிலாளர்கள்‌ வருமான சமத்துவமின்மையின்‌ கோர முகத்தின்‌ விளம்பரங்கள்‌. சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும்‌ என்ற கோரிக்கையோடு அவர்கள்‌ வீதிகளுக்கு வந்தது விடுமுறையைக் கொண்டாடுவதற்கு அல்ல, ஒரு வேளை உணவுக்கு உத்தரவாதமில்லாமல்‌, மாட்டிக்‌ கொள்வதிலிருந்து தப்பிப்பதற்கு.உண்பதற்கு ஒரு வேளை உணவும்‌, ஒதுங்குவதற்கு இடத்தையும்‌ பெறுவதற்குப் பணமில்லை என்ற பயம்‌ அவர்களின்‌ தவறல்ல. அவர்களுக்கு அந்த வசதியைக்‌ கூடச் செய்து தராமல்‌, குப்பைத்தொட்டியில்‌ கிடக்கும்‌ அழுகிய பழங் களை எடுத்து உண்ணும்‌ நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றிருப்பது நம்‌ அரசின்‌, சமுதாயத்தின்‌ தவறு.

வருமானத்தில்‌ சமத்துவமின்மை உலகம்‌ முழுவதும்‌ இருக்கும்‌ பிரச்சினைதான்‌ என்றாலும்‌ அதன்‌ கொடிய வேர்கள்‌, நம்‌ நாட்டில்‌ வெகு ஆழமாக ஊன்றி இருக்கிறது. புள்ளி விவரங்களை நம்ப வேண்டுமென்றால்‌, நம்‌ நாட்டின்‌ பொருளாதாரத்தில்‌ 77% சொத்துக்கள்‌, 10% மக்களின்‌ கையில்‌ உள்ளது. இந்த சமத்துவமின்மை சரிசெய்யப்பட வேண்டும்‌. ஆனால்‌ அது பெரும்பாண காரர்களின்‌ சொத்துக்களைப் பறித்துச் சரி செய்யப்படக்‌ கூடாது. அடித்தட்டில்‌ இருக்கும்‌ மக்களின்‌ பொருளாதார நிலையினை புரட்சிகரமான பொருளாதாரத்‌ திட்டத்தினால்‌ வலுப்படுத்தி அவர்கள்‌ வாழ்க்கை நிலையை உயர்த்துவதால்‌ மட்டுமே சரி செய்யப்பட வேண்டும்‌. இந்தியாவின்‌ மிகப்பெரிய சவால்‌, வறுமைதான்‌ என்பதை கொரோனா, மீண்டும்‌ உறுதி செய்திருக்கிறது. பணக்காரர்கள்‌ பாதிக்கப்படுவார்கள்‌, ஆனால்‌ பட்டினியால்‌ உயிரிழக்க மாட்டார்கள்‌.

நம்‌ தலைவர்கள்‌ எளிய மனிதனின்‌ பிரச்சினை களையும்‌, தேவைகளையும்‌ கவனத்தில்‌ கொண்டு தேசத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்‌. நிவாரண உதவிகள்‌ என்பது நடந்த தவறுகளை ஈடுகட்டும்‌ முயற்சிதான்‌ என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்‌. ஒருபுறம்‌ மனித இனத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று, மறுபுறம்‌ இந்தியாவிற்கு, கடந்த கால தவறுகளைத்‌ திருத்திக்‌ கொண்டு, வளர்ந்த நாடாக முன்னிற்கும்‌ பெரும்‌ வாய்ப் பையும்‌ , வழங்கி இருக்கிறது. கமல்‌ஹாசன்‌ ஆகிய நான்‌, வளமான வாழ்க்கை எல்லோருக்கும்‌ என்ற நிலைப்பாட்டுடன்‌, தனிமனிதனின்‌ சுகாதார மற்றும்‌ பொருளாதார அடிப்படை களைத்‌ தீர்த்து வைக்கும்‌, புரட்சிகரமான திட்டத்துடன்‌, எனது சொந்த மாநிலமான தமிழகத்தைப் புனரமைக்க உறுதி கூறுகிறேன்‌. ஒவ்வொரு மாநிலமும்‌ இந்த முயற்சியைக் கையில்‌ எடுத்து, பிற மாநிலங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டால்‌, தரமான சுகாதாரம்‌, பொருளாதார மற்றும்‌ சமூக சமத்துவம்‌, வளமான வாழ்வு என உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா திகழும்‌ நாள்‌ வெகுதொலைவில்‌ இல்லை.

வல்லரசு என்ற இந்தியாவின்‌ பல்லாண்டு கனவை, தூசி தட்டி எடுத்து, அதை நோக்கிப் பயணிக்கும்‌ நேரம்‌ இது. உலக நாடுகள்‌ அனைத்துக்கும்‌ முன்‌ மாதிரியாக, நம்பிக்கையின்‌ முன்னோடி யாக, சிலருக்குப் புரியும்படி சொல்வதென்றால்‌, சரியான காரணங்களுக்காக, விஷ்வ- குருவாக மாறுவோம்‌.

இவ்வாறு அறிக்கையில் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஏற்கெனவே கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு இந்திய வளர்ச்சி மற்றும் மக்களின் நிலை குறித்து நீண்ட கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>