டாக்டர்களுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.. அமித்ஷா உறுதி

கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார். இதையடுத்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தைக் கைவிட்டது. நாட்டில் கொரோனா ஊரடங்கை அறிவிக்கும் முன்பாக பிரதமர் முதன்முதலில் சொன்னது, டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டச் சொன்னதுதான். ஆனால், அவர் அப்படிச் சொன்னதாலோ, என்னவோ.. நாட்டில் தலைகீழாக நடக்கிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு தரமான முகக் கவசம் மற்றும் கவச உடைகள் வழங்கப்படவில்லை. டெல்லி உள்பட சில நகரங்களில் டாக்டர்கள் மீது நோயாளிகள் எச்சில் துப்பியது மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவங்களும் நடந்தன. இதன் உச்சக் கட்டமாக, கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து அந்நோய் பாதித்த டாக்டர்கள் மரணமடைந்தனர். அவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூட முடியாத சம்பவங்களும் நடந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த 2 நாள் முன்பாக உயிரிழந்த டாக்டர் சைமன் உடலை அடக்கம் செய்யக் கொண்டு சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்றது.

இந்த நிலையில், டாக்டர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் ஒரு போராட்டத்தை அறிவித்தது. இதன்படி, இன்று(ஏப்.22) இரவு 9 மணிக்கு டாக்டர்கள் பணியைப் புறக்கணித்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது என்றும், நாளை கருப்பு தினம் கடைபிடிப்பது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் இன்று காலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்திய மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பான பாதுகாப்பு அளிக்கும் என்று அமித்ஷா உறுதியளித்தார். இதையடுத்து, தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் ராஜன் சர்மா, பொதுச் செயலாளர் ஆர்.வி.அசோகன் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.

More News >>