கமல்ஹாசன் எழுதி இயக்கி பாடி வெளியிட்ட பாடல்.. கமலுடன் அனிருத், ஜிப்ரான், சித்ஸ்ரீராம் பாடினார்..

உலகளாவிய அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனித்துவமிக்க ஒரு பாடலை இயற்றியிருக்கிறார். இப்பாடல் மக்களிடம் நம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் பரவச் செய்யும்.நடிகர் மற்றும் அரசியல் வாதியான கமல்ஹாசன், இந்திய நாடு கொரோனா தொற்றினை கையாளும் விதம் குறித்துத் தொடர் குரல் எழுப்பி வருகிறார்,அவ்வகையில் இம்முறை இச்சூழலுக்கேற்ப ஒரு பாடலை இயற்றி, பாடி, இயக்கியும் உள்ளார். கடினமான இச்சூழலில், “அறிவும் அன்பும்” என்கின்ற அப்பாடல் நம்பிக்கையையும் நேர்மறை எண்ணங்களையும் மக்களின் மனதில் விதைக்கும்.

இப்பாடலை மேலும் சிறப்பாக்கும் வண்ணம் திரையுலகின் மிகப்பெரும் கலைஞர்கள் அனைவரும் பெரும் குதூகலத்துடன் உடனே சம்மதித்துப் பாடுவதற்கு ஒப்புக்கொண்டனர்,கமல்ஹாசனுடன் இணைந்து அனிருத் ரவிச்சந்திரன், யுவன்ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத்,ஷங்கர் மஹாதேவன்,ஸ்ருதி ஹாசன்,பாம்பே ஜெயஸ்ரீ,சித்தார்த்,லிடியன்,ஆண்ட்ரியா,சித் ஸ்ரீராம் அண்ட் முகேன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஜிப்ரன் இப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். மஹேஷ் நாராயணன் படத்தொகுப்பு. இப்பாடல் ஏப்ரல் 23 (இன்று) திங்க் மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. முதல் முறையாக ஜூம் செயலியின் மூலமாக ஊடக நண்பர்கள் முன்னிலையில் கமல் ஹாசனும், ஜிப்ரன் இப்பாடலை வெளியிட்டனர். அவரவர் வீட்டிலிருந்தபடி இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

இந்த பாடல் உருவானது பற்றி கமல்ஹாசன் கூறியது :இது ஒரு உண்மையான ஜனநாயக முறைப்படி நடந்தது. நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க இயலாத காரணத்தினால் அவரவர் பாடும் பகுதிகளைத் தனியாகப் படம் பிடித்தனர். இப்படி அவர்களாகவே வீட்டிலிருந்தபடி படப்பிடிப்பு நடந்ததால் இப்பொழுது ஒளிப்பதிவு என்று யாருடைய பெயர் போடுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை.உச்சக்கட்ட தொழில்நுட்ப காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவரவர் எடுத்த காணொளி களை எங்களுக்கு அனுப்பி வைக்க அதை நாங்கள் ஒன்றாகத் தொகுத்தோம்.நான் பாடல் எழுதினேன், ஜிப்ரான் இசையமைத்தார், மற்ற பாடகர்கள் அனைவரும் ஒரே ஒரு தொலைப் பேசி அழைப்பில் இந்த நோக்கத்தினைப் புரிந்து உடனே பங்குபெற்றனர்.இந்த கூட்டமைப்பு, எனது இனத்தின் பெருமையை இங்கு மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுக்க பறைசாற்றும்.கலைஞர்கள் எப்பொழுதும் மக்களிடையே நம்பிக்கை யை விதைப்பவர்கள். இப்பாடல் நம் அனைவருக்கும் மிகவும் கடினமான சூழலைக் கடக்கக்கூடிய வலிமையையும் வல்லமையையும் தரும் என்று உணர்த்தக் கூடியது என்பதை மீண்டும் நிரூபிக்கும்.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார், திங்க் மியூசிக் நிறுவனத்தின் தலைவர் ஸ்வரூப ரெட்டி இப்பாடல் குறித்து கூறும்பொழுது, 'கனவு போன்றிருக்கும் இத்தகைய சூழலில், புதிய வாழ்க்கை முறை அனைவருக்கும் ஒரு படிப்பினையாகத்தான் இருக்கும்' என்றார். “கூட்டு முயற்சியால் எடுக்கப்பட்ட இப்பாடல் கண்டிப்பாக இது போன்ற கடினமான சூழலை வெற்றிபெற்று விடுவோம் என்ற நம்பிக்கையளிக்கிறது” என்றார் ஜிப்ரான்.

More News >>