இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரம் தாண்டியது.. பலி 775 ஆக அதிகரிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நோய்க்கு இது வரை 775 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொடிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ம.பி., தமிழ்நாடு மாநிலங்களில்தான் அதிகமானோருக்கு இந்நோய் பாதித்துள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.25) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 1429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே போல், நோய் பாதித்த 57 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 24,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 5063 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 775 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் 6817 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 301 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 2815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 127 பேர் பலியாகியுள்ளனர்.டெல்லியில் 2514 பேர் கொரோனாவால் பாதித்த நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 1852 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 92 பேர் பலியாகியுள்ளனர். தெலங்கானாவில் 984 பேர் பாதித்த நிலையில், 26 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 1621 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதில், 25 பேர் பலியாகி விட்டனர். ஆந்திராவில் 955 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 1755 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>